21 ஆகஸ்ட் 2022
அருட்கொடையாகிய திருவிருந்து
Sacrament of Holy Communion
லூக்கா 22:7-20
• திருவிருந்து அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், குரு அபிஷேகம் ஆகியவை ஏனைய அருட்கொடைகள் ஆகும்.
• விடுதலைப்பயணம் அல்லது யாத்திராகமம் 12:1-14 இப்பகுதியில் பஸ்கா ஆடு பலியிடப்பட்டு இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, கிறிஸ்துவின் மரணம் எங்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் அடையாளச் சின்னமாகவே திருவிருந்து காணப்படுகின்றது.
• திருப்பாடல் அல்லது சங்கீதம் 42ல் தாவீது தன் ஆன்மா இப்பொழுதும் இறைவனில் தங்கியுள்ளது எனக் குறிப்பிடுகின்றார். எனவே திருவிருந்தும் நாம் இறைவனோடு ஐக்கியப்படுவதற்கான அடையாளச் சின்னமாகக் காணப்படுகின்றது. இதனையே, 1 கொரிந்தியர் 10:14-22 பகுதியில் பவுல் ஒரே பாத்திரத்தில் பருகுதல் எனக் குறிப்பிடுகின்றார். இதற்கூடாக திருவிருந்தில் நாம் இறைவனுடனும் ஏனையவருடனும் ஐக்கியமாகவும் இருக்க அழைக்கப்படுகின்றோம். எனவேதான், திருவிருந்து ஐக்கியத்தின் அடையாளச் சின்னம் எனக் கருதப்படுகின்றது.
• நற்செய்தி வாசகத்தின்படி லூக்கா 22:7-20 ஆண்டவர் இயேசு அநேக விருந்துகளை தமது சீடர்களுடன் ஏற்படுத்தியிருந்தார் (லூக்கா 7:36-50). இவ்வாறாக, மேற்கொள்ளப்பட்ட ஒரு விருந்து திருவிருந்து ஆகும். இங்கு ஆண்டவர் இயேசு தமது சரீரத்தை பிட்கவும் தமது இரத்தத்தை சிந்தவும் ஆயத்தப்பட்டார். அதுபோல, நாம் நம்மை சிந்தவும், உடைக்கவும் எம்மை அர்ப்பணிக்கும் இடமாகும். எனவேதான், இதனை துன்புறுதலின் அடையாளம் எனக் கருதுகின்றோம். ஆதித்திருச்சபையிலும் திருவிருந்தைப் பெற்றதற்காக மக்கள் கொல்லப்பட்டனர். ஏனெனில், உரோம சமூகத்தில் பிள்ளைகளை கொலை செய்து அவர்கள் சரீரத்தையும் இரத்தத்தையும் கிறிஸ்தவர்கள் உண்ணுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள் மத்தியில் காணப்பட்டது.