19 பெப்ரவரி 2023
மாற்றத்திற்கான காலமே லெந்து ஆகும்
யோவான் 2:1-11
• மனித வாழ்வில் மீளாய்வு, திரும்பி பார்த்தல் ஆகிய வார்த்தைகளினூடாக நாம் எம்மை நாமே பரிசோதனை செய்யும் ஒரு காலமாக லெந்து காலம் காணப்படுகின்றது. இக்காலத்தில், இக்னேசியஸ் லொயலஸ் அவர்களின் ‘ஆவிக்குரிய பயிற்சிகள்’ என்ற நூல் ஆவிக்குரிய வாழ்வின் முன்னேற்றத்தை ஒப்பீடு செய்வதற்கு எமக்கு உதவுகின்றது.
• ஏசாயா 44ம் அதிகாரத்தில், இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இறைவனுக்கு எதிராக செய்த ஒவ்வொரு தவறுகளையும் குறித்து இறைவன் அவர்களுக்கு சுட்டிக் காண்பித்து மனமாற்றமடைய அவர்களை அழைக்கின்றார்.
• திருப்பாடல் – சங்கீதம் 6ஐ படித்துப் பார்க்கும்போது, அங்கு ஆசிரியர் தன்மீது இறைவன் கோபம் கொள்ளாதபடி இருக்குமாறு வேண்டுகிறார். தனது தவறுக்கேற்ற தண்டனைகளை தனக்கு அருளாதிருக்கும்படி இறையருளுக்காக மன்றாடுவதை நாம் பார்க்கின்றோம்.
• உரோமர் 11:13-14 வரை அங்கு பவுல், புறஇனத்தாரை எச்சரிப்பதை பார்க்கின்றோம். அதாவது, யூதர்கள் இறைவனுக்கு பிரியமில்லாமல் இருக்கும்போது, இறைவன் அவர்களை தள்ளிவிட்டு புறஇனத்தாரை தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தெரிவுசெய்கின்றார். எனவே, புறஇனத்தவர்கள் தாங்கள் மேன்மையானவர்கள் என எண்ணிவிடாமல் இறைதிட்டத்தில் இணைந்து கொள்வதே அவர்களது பணியாகும் என உற்சாகப்படுத்துகின்றார்.
• யோவான் 2:1-12ல் கானாவூரில் நடைபெற்ற ஓர் திருமண நிகழ்வைப் பற்றி ஆசிரியர் வலியுறுத்துகின்றார். பழைய இரசத்தைவிட புதிய இரசம் உருசை உள்ளதாகவும் தாராளமாகவும் காணப்பட்டது. அதாவது, பழைய இரசம் நீதிச்சட்டத்தை நியாயப்பிரமாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால், புதிய இரசமோ ஆண்டவர் இயேசு கொண்டு வரும் இறையரசைப் பற்றிய எடுத்துக் காட்டாகும். எனவே, பழையவைகளை விட்டு புதிய இறையரசை நோக்கி மனமாற்றத்துடன் பிரயாணிப்பதே அவசியமானதாகும் என இயேசு கூறுகிறார். 2 கொரிந்தியர் 5:17-20ல் ஒருவர் கிறிஸ்துவுக்குள் வாழும்போது, பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதியவைகள் ஆயின என்ற மனமாற்றத்தை நோக்கிய பாதையில் இக்காலத்தில் நாம் பிரவேசிப்போமாக.
ஆக்கம் : அற்புதம்
அருமையான பதிவு