26 மார்ச் 2023

பாடுகள் / சிலுவை / வாழ்வளிக்கும் கிறிஸ்து
Cross and the Restoring Christ
மாற்கு 10:46-52

• நமது நாளந்த வாழ்வில் ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ வாழ்வை நோக்கிப் போராடுகின்றோம். வாழ்வை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்து சிந்திக்கின்றோம். இங்கு சிலுவை என்பது, நாம் மற்றவரின் நன்மைக்காக தெரிந்தெடுக்கும் துன்பமேயாகும். நாம் பிறருக்காக துன்பப்படும்போது எமக்கு வாழ்வு கிடைக்கின்றது. கோதுமை மணி நிலத்தில் விழுந்து மரிக்காத பட்சத்தில் அது வாழ்வை கொடுக்க முடியாது (யோவான் 12:20-26).

• யோபு 42:10ம் வசனத்திலிருந்து நாம் படிக்கும்போது, ஒரு மனிதன் மறுபடியும் தன்னுடைய வாழ்வை கட்டிக்கொள்ள விரும்பினால், தன்னுடைய இழப்புக்களிலிருந்து வெளியே வர விரும்பும்போது அவன் தன்னுடைய இழப்புக்களைக் குறித்து சிந்திக்காமல் மற்றவர்களுக்காக மன்றாடுவதன் ஊடாக தனக்கான வாழ்வையும் சமூகத்திற்கான வாழ்வையும் அவன் பெறுகின்றான். யோபு எல்லாவற்றையும் இழந்த வேளையிலும் (யோபு 42:10ல்) யோபு தன் சிநேகிதருக்காக மன்றாடினார். கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுவுக்கு முன்னிருந்த எல்லாவற்றை பார்க்கிலும் இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார். இப்பகுதி வாழ்வளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்கின்றது.

• சங்கீதம் – திருப்பாடல் 126இலும் கூட வாழ்விற்காக ஆசிரியர் மன்றாடுகின்றார். அதாவது, இஸ்ராயேல் மக்கள் தமது வாழ்வில் அனைத்தையும் இழந்த நிலையில் மறுபடியும் மீள்கட்டுமானத்தில் இறை உதவியை நாடுகின்றனர். மனித முயற்சியினால் வாழ்வு போராட்டத்தை மேற்கொள்ள நாங்கள் முற்பட்டாலும் இறை உதவியின்றி எங்களால் ஒன்றும் செய்ய முடியாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.

• புதிய ஏற்பாட்டு பகுதியிலே எபேசியர் 2:10லே எங்களுக்கு கிடைத்துள்ள வாழ்வு அல்லது மீட்பு எங்களுடைய சுயமுயற்சியால் கிடைத்தது அல்ல. எமது பற்றுறுதியினால் நாம் கிருபையைக் கொண்டு அல்லது இறையருளைக் கொண்டு மீட்கப்பட்டோம். அது எங்களுடையது அல்ல. மாறாக, இறைத்திட்டமாகும். இங்கு கிருபை என்பது தகுதியற்றவர்கள்மேல் கடவுள் காண்பிக்கும் அன்பாகும். இந்த அன்பே இந்த அருளே வாழ்வுக்கான அடித்தளமாகும்.

• நற்செய்தி வாசகத்தில் மாற்கு 10:46-52ல் வாழ்வுக்காக போராடிய பர்திமேயு என்னும் பார்வையற்ற மனிதனை இயேசு குணப்படுத்தியதை நாம் பார்க்கிறோம். அதாவது, 2 சாமுவேல் 5ம் அதிகாரத்தின்படி அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் தாவீதின் காலத்தில் ஆலயத்தை விட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தனர். எனவே இந்த சமூகம் தாவீதின் பரம்பரையிலிருந்து ஒருவர் வருவார். அவர் இழந்துபோன உரிமையை மறுபடியும் எமக்கு அருளுவார் என நம்பியிருந்தனர். எனவேதான், இந்த பார்வையற்ற மனிதர் இயேசுவை கண்டவுடன் தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என வேண்டுகின்றார். இயேசு அவருக்கு பார்வையை மாத்திரமல்ல மாறாக, ஆலயத்திற்குள் செல்லும் அங்கீகாரத்தையும் வழங்கினார். எனவே, இன்று அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் குணப்படுத்தலை மாத்திரமன்றி சமூக அங்கீகாரத்தை எதிர்ப்பார்க்கின்றனர். இதுவே அவர்களுக்கான வாழ்வாகும்.

• கடவுள் வாழ்வளிக்கும் பணியை உலகிலே ஆற்றினார். அப்பணியை தமது மைந்தன் இயேசுகிறிஸ்துவிடத்திலும் கையளித்தார். அப்பணி எம்மிடத்திலே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, சிலுவை வழிநின்று வாழ்வு கட்டுமானப்பணியில் எம்மை இணைத்துக் கொள்ளுவோமாக.

ஆக்கம் : அற்புதம்