ai generated, discerning father, heavenly light-8664177.jpg

Waiting upon the Holy Spirit

லூக்கா 24:44-49

•            தூய ஆவியர் எனும் பதம் புதிய ஏற்பாட்டில் ‘நியூமா’ என்னும் கிரேக்க பதத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது உயர்திணை சார்ந்த ஒரு பதமாகும். தூய ஆவியர் பற்றிய போதனைகள் யோவான் நற்செய்தியிலேயே காணப்படுகின்றன. தூய ஆவியர் புதிய வழிபாட்டை எதிர்நோக்குபவராக (யோவான் 4:24), தூய ஆவியர் எமது உள்ளத்தில் இருந்து ஊற்றெடுப்பவராகவும் (யோவான் 7:35-37), தூய ஆவியர் நீதியைக் குறித்தும் பாவத்தைக் குறித்தும் நியாயந்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துபவராக (யோவான் 14,15,16ம்) அதிகாரங்களில் காட்டப்படுகின்றார்.

•            லூக்கா எழுதிய நற்செய்தி பொதுவாகவே தூய ஆவியருக்கு முக்தியத்துவம் கொடுக்கும் ஓர் நற்செய்தியாகும். நற்செய்தியாளனாகிய லூக்கா திருத்தூதுவர்பணிகள் நூலினதும் ஆசிரியர் ஆவார். திருத்தூதுவர்பணியில் தூய ஆவியரின் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக்காட்டப்படுகின்றது. பொதுவாக, லூக்கா நற்செய்தியில் இயேசுவின் பிறப்பு தூய ஆவியரின் செயற்பாட்டினால் ஏற்பட்டது என லூக்கா 1:26-38 வரையுள்ள பகுதி பேசுகின்றது. அத்துடன் இயேசுவின் திருமுழுக்கின்போது தூய ஆவியர் புறா வடிவில் வருகைத் தந்ததாகவும் காட்டப்படுகின்றது (லூக்கா 3:10-17). அத்துடன், தூய ஆவியர் இயேசுவின் வாழ்வின் செயற்பாடுகளில் அதிகளவு பங்களிப்புச் செய்தவராகக் காட்டப்படுகின்றார். ஆனால், தூய ஆவியர் பற்றிய போதனைகள் எதுவும் லூக்கா நற்செய்தியில் காட்டப்படுவதில்லை.

•            திருத்தூதுவர்பணிகளுக்கு ‘தூய ஆவியரின் செயற்பாட்டு நூல்’ என்னும் பெயரும் காணப்படுகின்றது. இங்கு தூய ஆவியர் சீடர்களுக்கு பலமளிக்கும் வகையில் பெந்தேகோஸ்தே நாளில் திருச்சபைமீது பொழியப்பட்டார். இதனை திருத்தூதுவர்பணிகள் 2:1-10லும், தூய ஆவியர் முதல் புதுமை ஆற்றுபவராகவும் தண்டனையை வழங்குபவராகவும் திருத்தூதுவர்பணிகள் 5:1-10ல் நாம் படிக்கிறோம். அத்துடன், தூய ஆவியரின் துணைக்கொண்டே திருத்தொண்டர்கள் பணியாற்றியதாக திருத்தூதுவர்பணிகள் 6:1-10 எங்களுக்குக் கூறுகின்றது. மேலும், திருத்தூதுவர்பணிகள் 10:34-43 வரையுள்ள பகுதியில் தூய ஆவியர் எல்லைகள் அனைத்தையும் கடந்து செயற்பட பேதுருவை அழைக்கும் காட்சியை நாம் காணலாம். திருத்தூதுவர்பணிகள் 13:1-3ல், பவுலையும் பர்னபாவையும் திருப்பணிக்காக பிரித்தெடுக்கும் பணியை தூய ஆவியர் நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம்.

•            பவுலினுடைய ஏனைய நிருபங்களிலும் தூய ஆவியர் பற்றிய போதனைகள் காணப்படுகின்றன. 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில், தூய ஆவியர் வரங்களை வழங்கும் ஒருவராகக் காட்டப்படுகின்றார். மேலும் 1 கொரிந்தியர் 6:17ல், எமது சரீரம் தூய ஆவியரின் ஆலயம் எனவும் கூறப்படுகின்றது. கலாத்தியர் 5:19-23ல், தூய ஆவியரின் கனிகள் பற்றியும் நாம் காண்கின்றோம். இக்கனிகள் ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்பது எடுத்துக்காட்டப்படுகின்றது. 

•            இப்பேர்ப்பட்ட ஒருவருக்காகவே திருச்சபை காத்திருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். இவர் திருத்துவத்தில் மூன்றாவது நபராகவும் அதேநேரத்தில் திருச்சபையின் உருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் அதிகளவு பங்களிப்பு செய்பவராகவும் மக்களின் மனதில் செயற்படுபவராகவும் காட்டப்படுகின்றார். இப்பேர்ப்பட்ட சிறப்புப் பண்புள்ள ஒருவருக்காகவே திருச்சபை இந்நாளில் காத்திருப்பதை நாம் பார்க்கின்றோம். எனவே, தூய ஆவியர் தீய ஆவிக்கு எதிரானவராகவும் அதேநேரம் இறையரசில் தூய ஆவியரின் செயற்பாடு மிகவும் பலமுள்ளது என்பதை இயேசுவின் புதுமைகளும் எங்களுக்குக் காண்பிக்கின்றன. சிறப்பாக, மாற்கு 1:25-35 வரையுள்ள பகுதியில் தீய ஆவியை இயேசு துரத்துகின்ற புதுமையும், மாற்கு 5:1-19 வரையுள்ள பகுதியில் லேகியோனிடமிருந்து தீய ஆவி துரத்தப்படுவதும் தூய ஆவியரின் பலத்தை மென்மேலும் நிரூபிக்கின்றது. எனவே, தூய ஆவியரின் திருப்பெயராலே ஆதித்திருச்சபை தமது பலத்தை ஆற்றலைப் பெற்றது. இன்றும் நாமும் இத்தூய ஆவியால் நிரப்பப்பட்டு பலப்பட்டு இறையாட்சிக்கு சான்று பகர இறைவன் எம்மை அழைக்கின்றார்.  

ஆக்கம்: அற்புதம்