விடுதலைப்பயணம் 3:1-12
• ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ இறைவனைப் பற்றிய தன்மை அவரது செயற்பாடு போன்றவற்றை அறிந்துகொள்வதே இறையியல் என அழைக்கின்றோம். இறைவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் இறைவனின் வெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், மனித அனுபவங்கள், பிற சமய ஏடுகள் எமக்கு உதவுவதை நாம் அவதானிக்கலாம். இக்கல்வி அல்லது தேடல் திருப்பணியாளர்களுக்கு மாத்திரமன்றி பொதுநிலையாளர்களுக்கும் இது அவசியமாகின்றது. ஏனெனில், நாம் அறிந்துகொண்ட காரியங்களை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு கல்வி அவசியமாகிறது. உதாரணமாக: இதயத்திலிருந்து எழுந்துவரும் பற்றுறுதியை மூளையினூடாக பிறருக்கு வெளிப்படுத்துவதற்கு அறிவு அவசியமாகின்றது.
• இவ் இறையியல் அறிவை நாம் அறிந்துக்கொள்வதும் அதற்கு செயற்பாட்டு வடிவம் கொடுப்பதுமே எமது அழைப்பாகும். விடுதலைப்பயணம் 3:1-12ல் மோசேயை இறைவன் அழைத்ததை நாம் காணலாம். அவனுடைய அழைப்பு ஓர் குறிக்கப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக, கலாசார பின்னணிகளிலிருந்து எழுகின்றது. மேலும், அவனுடைய அழைப்பில் அரண்மனை அனுபவமும் செல்வாக்குச் செலுத்துகின்றது. எத்திரோவின் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருக்கும் வேளையில் இவ் அழைப்பு அவனுக்குக் கிடைக்கின்றது. இங்கு எரியும் முட்செடியின் மத்தியில் இறைவன் தோன்றுதல் என்பது, எரிந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளின் மத்தியில் இறைவன் தோன்றுகிறார் என்பதே இங்கு விளங்கப்படுத்தப்பட வேண்டியதாகும். மோசேயினுடைய அழைப்பு ஓர் தீர்க்கரின் அழைப்பிற்கு சமானமாகின்றது. அழைப்பில் மறுப்பு தெரிவிக்கும் தன்மை, பின்னர் இறைவன் அழைப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அழைத்தவருக்கு உதவுகின்ற தன்மை, ஈற்றில் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்றவைகள் இறைவாக்கினருக்கு உரிய பண்புகளே ஆகும். அத்தகைய முறையிலேயே இவ் அழைப்பு இடம்பெறுகின்றது. இது ஓர் தொடர்ந்து செல்லும் அழைப்பாகும். இறைவனைப் புரிந்துகொள்ளும் ஓர் அழைப்பாகும். எனவேதான் விடுதலைப்பயணம் 3:14லே, இறைவன் மோசேயை நோக்கி, “நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்” என கூறுகின்றார். இதன்படி இறைவனின் தன்மை எப்படிப்பட்டது? அவரது செயற்பாடு எப்படிப்பட்டது? என்பதை மோசே நன்கு அறிந்துகொள்கின்றார்.
• யோவான் 12:20-26ல், இயேசுவை கிரேக்கர்கள் சந்திக்க வருகின்றனர். இங்கு கிரேக்கர்கள் அறிவு மிக்கவர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் இயேசுவை அறிவின்மூலம் கண்டடைய முற்படுகின்றனர். அதாவது, அறிவு பற்றுறுதிக்கு அடித்தளமானது. பற்றுறுதி ஒரு மனிதனின் இதயத்திலிருந்து எழுகின்றது. இதயத்திலிருந்து எழும் பற்றுறுதியை இன்னுமொருவருக்கு எடுத்துக் கூறுவதற்கு அறிவு அவசியமாகின்றது. இவ்வாறு அறிவின் மூலமாக கிரேக்கர்கள் இயேசுவை கண்டடைய முற்படுகின்றனர். அவ்வேளையில் இயேசு அவர்களை நோக்கி, “ஓர் மனிதன் மடிய வேண்டும். மடிந்தாலேயொழிய அவனால் எத்தகைய பலன்களையும் கொடுக்கமுடியாது” என்கிறார். “கோதுமை மணி நிலத்தில் விழுந்து மரித்தாலேயொழிய அதனால் பிரயோஜனம் எதுவுமில்லை” என்கின்றார்.
• எனவே இத்திருநாளன்று இறையியற் கல்லூரிகளுக்காகவும், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களுடைய அழைப்பிற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற இந்நாளிலே எமது இறையியல் இறைவனைப் பற்றி மாத்திரம் அறிந்துகொள்வதும் அறிவிப்பதுமாகக் காணப்படாமல் அவ்விறையியலும் பற்றுறுதியும் செயற்பாடு சார்ந்ததாகவும் அமைய வேண்டும். இறைவன் எவ்வாறு படைப்பாளனாக, விடுதலையாளனாக, குணமளிப்பவனாக, ஒப்புரவாளனாக, ஆறுதல் வழங்குபவனாக, நீதியை ஏற்படுத்துபவராக, அமைதியை விதைப்பவராக காணப்படுகிறாரோ அதேபோன்ற இறைவனின் செயற்பாடுகளை நாம் வாழுகின்ற சூழலில் ஆற்றுவதை எமது விசுவாசத்தை அல்லது எமது பற்றுறுதியை செயற்பாட்டு வடிவமாக்குவதாக. எனவே பற்றுறுதியை அறிவிப்பவர்களாக அல்ல அதற்கு அர்த்தம் கொடுத்து செயற்படுபவர்களாக இறைவன் எங்களையும் உங்களையும் அழைக்கின்றார்.
ஆக்கம்: அற்புதம்
Photo Courtesy: Theological College of Lanka