31 டிசம்பர் 2023

ஆண்டவரிடம் நன்றியுடன் வருதல்

Come to the Lord with Thanksgiving
லூக்கா 17:11-19

• இவ்வருடத்தின் நிறைவுநாள் நாம் நன்றியுள்ள இருதயத்துடன் நாம் ஆண்டவரிடத்திலே வந்திருக்கின்றோம். திருப்பாடல் – சங்கீதம் 103:1-3 வரையுள்ள பகுதியில், “ஆத்துமாவே அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்பது நன்றியுள்ள இதயத்தின் அவசியத்தை எடுத்துக் காண்பிக்கின்றது. ஆமோஸ் 9:7ல், “இஸ்ராயேல் புத்திரரே நீங்கள் எனக்கு எத்தியோப்பியரைப் போல் இருக்கின்றீர்கள்” என இறைவாக்கினர் கூறுகின்றார். இங்கு எத்தியோப்பியர் என்பது நன்றியற்ற இனத்திற்கு உவமையாக்கப்படுகின்றது. இதன்மூலம், நன்றி அவசியம் என்பதை ஆண்டவர் எதிர்ப்பார்க்கின்றார்.

• லூக்கா 17:11-18ல், பத்து தொழுநோயாளர்களை ஆண்டவர் குணப்படுத்துகிறார். அதில் ஒருவர் மாத்திரமே நன்றியுள்ள உணர்வுடன் வருகை தந்து இயேசுவுக்கு நன்றி கூறுகிறார். இவரை ஆண்டவர் பாராட்டுகிறார். இதன்மூலம், ஆண்டவர் நன்றியை எதிர்ப்பார்க்கிறார் என்பது வெளிப்படுகின்றது.

• திருப்பாடல் – சங்கீதம் 91ல், கடவுளுடைய பாதுகாப்பிற்காகவும் பராமரிப்பிற்காகவும் எதிரிகளிடமிருந்து அவர் எங்களை தப்புவித்ததற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு ஆசிரியர் எங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்.

• பிலிப்பியர் 3:12-15 வரையுள்ள பகுதியில், நற்குணங்களைப் பற்றி ஆசிரியர் பேசுகிறார். நாம் மற்றவர்களுடன் பேண வேண்டிய அன்பு, சமாதானம், ஒப்புரவு போன்றவைகள் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். சிறப்பாக, ஆண்டவருடைய ஆலயத்திற்கு நன்றியோடு வந்திருக்கிற இவ்வேளையில் இந்த நற்பண்புகளை நாங்கள் கடைப்பிடிக்கவும் இப்பண்புகளுக்கு உயிரளிக்கவும் அதற்கூடாக சமுதாயத்தில் நாம் இறை பிரஜைகளாக வாழ இறைவன் எமக்கு அளித்த வாய்ப்புக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்