வசந்தகாலப் பூக்கள் 9

ஒன்பதாம் தியானம்

படைக்குப் பிந்தினாலும் பந்திக்கு முந்திக் கொள் என்னும் பழமொழி எம்மிடையே காணப்படுகின்றது. இதன்படி, இயேசுவைப் பின்பற்றுதல் என்பது, வெறுமனே ஒரு நபரைப் பின்பற்றுவது அல்ல மாறாக, விடுதலையை உண்மையை வாழ்வை பின்பற்றுதல் ஆகும் (யோவான் 14:6). இயேசுவின் சிலுவை பயணத்தில் பேதுரு அவரை தூரத்தில் பின்பற்றினார் என மாற்கு கூறுகின்றார் (மாற்கு 14:54). இன்றைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாம் அச்சமடைந்துள்ள வேளையில், நபர்களுக்கிடையே இடைவெளி பேணப்பட வேண்டும் என்ற உண்மை கூறப்படுகின்றது. ஆனால், இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனும் இடைவெளியை வைத்திருத்தல் தவறானதாகும்.

இயேசுவுக்கும் எமக்கும் இடையே அவரைப் பின்பற்றும் வேளையில் எவைகள் இடைவெளிகளை உருவாக்குகின்றன? நாம் இயேசுவை ஏன் தூரத்தில் பின்பற்றுகின்றோம். ஒருவேளை மரண பயம், இயேசுவிலும் பார்க்க எம்மை அதிகமாக நேசிக்கும் நிலை போன்றவைகளை காரணங்களாகக் கூறலாம். எனவே, இயேசுவண்டை நாம் நெருங்கிச் செல்லும்போது, எம்மை நெருக்குகின்ற அனைத்து தடைகளையும் எம்மால் தாண்டிச் செல்ல முடியும்.

             

செபம்: இறைவா உம்மை நெருங்கிச் சேரவும், உம்முடன் இணைந்து பிரயாணிக்கவும் எனக்கு அருள் புரிவாயாக.