முழக்கம் 04
பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் எனும் சாதி ரிதியான வசைச்சொற்கள் இன்றும் சமூகத்தில் மிகவும் புழக்கத்தில் உள்ளது. குடித்துவிட்டு ரகளை செய்தல், களவு செய்தல், சமூகக்குற்றங்களை செய்தல், உரையாடல்களை தொடங்குதல் போன்ற செயல்களை யாரோ ஒருவர் செய்கிறபோது அவர்களை மேற்குறிக்கப்பட்ட ஒரு சொல்லை வைத்து வசைபாடுவது மேட்டுகுடிமனநிலையாக இருக்கின்றது. மேற்குறப்பட்ட செயல்களை செய்பவர்கள் எந்த சாதிய பின்புலத்தை சார்ந்தவர் என்று தெரியாமல் இவ்வாறு ஒருவரின் செயல்களை வைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்யும் மனநிலை இலங்கை, இந்திய கிறித்தவ திருச்சபைகளிலும் கிறித்தவர்களிடமும் காணப்படுகிறது.
"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" யோவான் 1:46 என்ற கூற்றும் நாசரேத்தூர் இயேசு எனும் பதமும் நற்செய்திகளில் பலமுறை பயன்படுத்தப்படுகிறது. "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" மத்தேயு 26:69 என்ற கூற்றும் நற்செய்தியில் பதிவுசெய்யப்படுகின்றது.
நாசரேத்தூரான், நசரேயன், கலிலேயன் போன்ற சொற்கள் சமூக, பொருளாதார, நிலஅமைப்பு சார்ந்து பார்க்கும் போது யூதர்களை பொறுத்தவரை இவ்விடங்கள் மரியாதை குறைவான எமது கால மொழிநடையில் கூறவேண்டும் என்றால் குறைஞ்ச சாதி ஆக்கள், கீழ்ச்சாதி, தோட்டக்காட்டான், பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் ஆகிய வசை சொற்களுக்கு நிகரானவை.
நசரேயன், கலிலேயன் என்று குறைத்து மதிப்பிடப்பட்ட கிறித்துவை மீட்பராக ஏற்றுக்கொண்ட கிறித்தவர்கள் நடுவே சாதிய வசைச்சொற்களுக்கு இடம் இருக்கக்கூடாது. உயர்சமூகம் என்று நினைத்து கொண்டு இருப்பவர்கள் கிறித்துவை கிறித்துவாக பார்ப்பது நல்லது. மேலும் சாதி ரீதியான வசைச்சொற்களை பயன்படுத்தி சக மனிதனின் மாண்பை இழிவுபடுத்துவது கிறித்துவுக்கு எதிராக செய்யும் பாவம் என்பதை உணரவேண்டும், உணரவில்லை என்றால் நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
சாதிய மறுப்பு கிறிஸ்தவத்தின் நிபந்தனை என்பதை உலகறிய செய்வோம் !! சாதியம் கிறிஸ்துவுக்கு எதிரான கோட்பாடு என்பதை உரக்க சொல்லுவோம் !!