மாற்கு 4:1-9, மத்தேயு 13:1-9, லூக்கா 8:4-8

              ஆண்டவராகிய இயேசு விதைப்பவர் உவமையை கூறியபோதிலும் இது பிற்பட்ட காலப்பகுதியில் உருவக அமைப்பாக ஏற்படுத்தப்பட்டதை நாம் காணலாம். ஒத்தமை நற்செய்திகளில் இவ்வுவமையைப் பற்றி நாம் படித்தறியலாம். எனினும், மாற்கு மற்றும் மத்தேயு நற்செய்திகளில் ஆண்டவர் இயேசு இவ்வுவமையை கடலில் ஒரு படவில் அமர்ந்து மக்களுக்கு போதித்ததாக காட்டப்படுகின்றது. எனினும், லூக்கா நற்செய்தியில் இவ்வுவமை சமதரை பூமியில் நடைபெறுவதாக காணப்படுகின்றது.

1ம் நூற்றாண்டு திருச்சபையின் தன்மையை இவ்வுவமை எடுத்துக் காண்பிக்கின்றது. அதாவது, பாலஸ்தீனா தேசத்தில் நிலத்தை உழுத பின்னர் விதைகளை விதைக்க மாட்டார்கள். மாறாக, விதைத்த பின்னரே நிலத்தை உழுவர். இத்தகைய பின்னணியில் விதைக்கப்படும் விதைகளில் ஒரு சில விதைகளே பலனளிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். ஏனெனில், முற்புதர்களுக்குள் விதைக்கப்பட்ட விதைகள் வளர்கின்றன. எனினும், அவைகள் பலனளிப்பதில்லை. இந்நிலை 1ம் நூற்றாண்டு திருச்சபை யூதர்களாலும் ரோமர்களாலும் துன்புறுத்தப்பட்ட நிலையைக் காண்பிக்கின்றது. இதன் காரணமாக, கிறிஸ்தவர்களில் பலர் திருச்சபையை விட்டு விலகிச் சென்றதை நாம் காணலாம். கற்பாறைகள் மேல் விதைக்கப்பட்ட விதைகள் ஆழம் போதாமையால் பலனளிக்கவில்லை. இந்நிலை, ஆதித்திருச்சபையில் இயேசுவின் போதனைக்கு எதிராக நிலவிய ஞானவாதக்கொள்கை, தோற்றக்கொள்கை, எபியோனிசக் கொள்கை போன்ற கொள்கையைக் குறிப்பிடலாம். இவர்களின் கருத்துப்படி கடவுள் உலகைப் படைக்கவில்லை. மாறாக, கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்த தேவதூதர்களே உலகைப் படைத்தனர் எனப் போதித்தனர். மேலும், இயேசுவின் உடல் உண்மையான உடல் அல்ல. மாறாக, தோற்ற உடல் எனக் கூறி வந்தனர். மற்றும் மீட்பு எல்லோருக்கும் உரித்தானது அல்ல எனப் போதித்தனர். இத்தகைய காரணங்களால் இயேசுவின் போதனைகள் மக்களின் மனதுக்குள் ஆழமாகச் செல்லவில்லை. அதனால், போதியளவு பலன்கள் கிடைக்கப்பெறவில்லை.

மேலும், தரையில் விழுந்த விதைகள் பறவைகளால் பட்சிக்கப்பட்டன. இதன்படி, இம்மக்கள் வார்த்தைகளை அவதானத்துடன் கேட்பதில்லை. மாறாக, வார்த்தையைக்கேட்டு, அதன்படி செய்பவர்கள் பலனைக் கொடுக்கின்றார்கள். அவர்களின் வாழ்வு நிலையானதாகக் காணப்படுகின்றது என மத்தேயு கூறுகின்றார் (மத்தேயு 7:24-30).

இதனையே, திருப்பாடல் 1:1-6 வரையுள்ள பகுதியும் எடுத்துக் காண்பிக்கின்றது. இன்று வார்த்தையை பின்வரும் வழிகளில் நாம் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக, படைப்புடன் இணைந்துள்ள வார்த்தை, இறைவாக்கினர் ஊடாக பேசப்பட்ட வார்த்தை, மனுவுருவான வார்த்தை, எழுதப்பட்ட வார்த்தை என 4 நிiலைகளில் இவ்வார்த்தையை நாம் புரிந்து கொள்ளுகின்றோம். ஆனால, இவ்வார்த்தை இன்று முதலாளித்துவ சிந்தனையையாலும் உலக பொருள்முதல்வாதத்தினாலும் நுகர்வு கலாசாரத்தினாலும், சுயநல சிந்தனைகளினாலும் நெருக்கப்படுகின்றன. இதனால். போதியளவு பலன்களை கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இறையரசின் வார்த்தைகளை நாம் சோர்ந்து போகாமல், அறிவிக்க வேண்டும். இதுவே எமது கடமையாகும். ஏனெனில், இது எம்மிடம் கையளிக்கப் பட்டுள்ள பெரும் பொறுப்பாகும். சமயம் கிடைத்தாலும் சமயம் கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை நாம் அறிவிப்போமாக.

ஆக்கம்: அற்புதம்