மத்தேயு 28:18-20

மூவொரு கடவுளின் திருநாள் (திரித்துவ திருநாள்)

நம்முடைய தாய்தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும்
அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் மூவொரு கடவுளின் திருப்பெயரால்
வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
இயேசுவும் அவருடைய சீடர்களும் கலிலேயாவிலுள்ள ஒரு
மலையின் மீது ஏறினர். இயேசு தம்முடைய சீடர்களைத்
திருப்பணிக்கு அருட்பொழிவு செய்த அதே மலையின் மீது
உயிர்த்தெழுந்த பின் மீண்டுமாக அதே இடத்தில் தம்முடைய
சீடர்களுடன் மாபெரும் அருட்பொழிவு நிகழ்வை நடத்துகிறார்.
அங்கே அவர்களுக்கு சீடத்துவத்திற்கான சிறப்பு கட்டளையையும்
கொடுக்கிறார்.


இங்கே விண்ணிலும் மண்ணிலும் அனைத்து அதிகாரமும்
எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை படிக்கின்ற போது
கடவுளின் மகன் என்று இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட பெயரை
அது குறிப்பிடவில்லை. கடவுளின் மகன் என்பதால் யாதொரு
சிறப்பு அதிகாரமும் புதிதாய் ஆண்டவர் இயேசுவுக்கு
அளிக்கப்படவில்லை. இறைவர் என்பதால் எதுவும் கூட்டப்படவும்
இல்லை. எதுவும் குறைக்கப்படவும் இல்லை. மாறாக, அது ஒரு
அதிகாரம், அந்த அதிகாரம் என்பது மனுவுருவேற்றல்,
கல்வாரியின் சிலுவை இறப்பு (பிலிப்பியர் 2:8-10) ஆகியவற்றின்
வழியாக வரும் சிறப்புரிமையைச் சார்ந்ததே ஆகும்.

சிலுவை இறப்புக்கு ஒப்புக்கொடுத்ததனால் இயேசு
கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமென்பது மனிதர்களின்
மனங்களை ஆளுதல், மனிதர்களை ஆளுதல், திருச்சபையைப்
பாதுகாத்தல், மனித செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்,
மனித மனங்களையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்துதல் என
மனிதர்கள் மீது மட்டும் நீட்டிப்பு அடையவில்லை. மாறாக,
விண்ணிலுள்ள ஆற்றல்கள் படைகளின் செயல்பாடுகளையும் தம்
கட்டளைகளுக்கு கீழ்ப்படியச் செய்யத் தக்கதான அதிகாரம்
இயேசுவுக்கு உள்ளது. தூயஆவியார் அவரால் அருளப்படுகிறார்.
அவரிலிருந்து வெளிப்படுகிறார். அவரிலிருந்து செயலாற்றுகிறார்.
தூதர்கள் யாவரும் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்கும்
அதன் உறுப்பினர்களுக்கும் பணிவிடை செய்யும்
பணிவிடைக்காரர்களாக உள்ளனர். அனைத்து ஆற்றல் அனைத்து அதிகாரங்களும் என்று சொன்னாலே அது ஆண்டவர் இயேசுவைத்

தான் குறிக்கும்.


புறப்பட்டு போங்கள் என்பது கிறிஸ்துவைப் பின்பற்றுகிற
ஒவ்வாருவருக்கும், கிறிஸ்துவைப் பின்பற்றுகிற அனைவருக்கும்
பொருந்தும். எல்லா நாட்டிற்கும் கற்பியுங்கள் என்பது எல்லா
நாட்டினர்க்கும் அனைத்து நாடுகளின் மக்களினங்களுக்கும்
நற்செய்தியை அறிவியுங்கள் என்று மொழியாக்கம்
செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கே கற்பியுங்கள் அல்லது
கற்பித்தல் என்பது உண்மையை அதாவது கிறிஸ்துவைக்
குறித்த சிலுவையின் திருச்செய்தியை நற்செய்தியாக
அறிவியுங்கள் என்பதை வலிமையாக உணர்த்துகிறது.
திருமுழுக்கு அளியுங்கள் என்பதற்கான ஒரே வாய்ப்பாடு
தந்தை, மைந்தன், தூயஆவியாரின் பெயராலே தண்ணீரினால்
திருமுழுக்கு அளிக்கிறேன் என்பது மட்டுமே ஆகும். ஆக
கடவுளின் வார்த்தை மட்டுமே திருமுழுக்கில் முக்கியத்துவம்
வாய்ந்தது. முழுகுதல் தெளித்தல் என்பது கட்டளைக்கு
புறம்பாக ஆடு திருடும் வேலைக்கான தந்திர செயல்களே ஆகும்.
முழுமனிதருக்கான அதாவது உடல், உயிர், ஆவி, ஆன்மா
ஆகிய முழுமையான மனிதருக்கான முழுமையான
நற்செய்தியை அறிவுரைகளாக ஆற்றல்படுத்தும் செய்தியாக
கற்பிக்க வேண்டும்.

கடவுளின் வார்த்தைகள் பரிந்துரைகள் கிடையாது. மாறாக,
அவைகள் நாம் கடைபிடிக்க வேண்டிய ஆண்டவரின்
கட்டளைகள். எனவே, அவற்றை இன்றியமையாதவைகளாக
கற்பிக்க வேண்டும். எல்லா காலங்களிலும் உங்களுடனே இருக்கிறேன் என்பதில் நான் நானே கடவுள் மற்றும் மனிதராக இருக்கிறேன்.
இருப்பேன் என்பதல்ல இருக்கிறேன் என்பதன் வழி
நிகழ்காலத்தின் கடவுளும் ஆண்டவருமாக இயேசு இருக்கிறார்.
இப்படியிருக்க, இயேசு எப்பொழுதும் நம் நடுவில்
இருக்கிறார்; உடனிருப்பவராக, உடன்பங்கேற்பாளராக, நண்பராக,
வழிகாட்டியாக, மீட்பராக, கடவுளாக இருக்கிறார். உலகின் முடிவு
பரியந்தம் என்பது முடிவு காலங்கள் வரையிலும் நம்முடன்
இருக்கிறேன் என்பது என்றென்றைக்குமான எனக்கான அல்லது
நமக்கான வாக்குறுதியும் உறுதிப்பாடுமாக உள்ளது.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே!
கடவுளின் வார்த்தைகளை கடைபிடிக்க வேண்டும். கடவுளின்
வார்த்தைகளைக் கற்பிக்கவும் கடைபிடிக்கவும் செய்ய வேண்டும்.
கடவுளின் வாக்குத்தத்தங்களும் கட்டளைகள் என்பதை
உணர்ந்து அவற்றின் மீது கீழ்ப்படிதலுடன் கூடிய நம்பிக்கை
உடையவர்களாய் வாழ வேண்டும். இந்த சிந்தனைகளோடு
நம்மை நாம் ஆண்டவரிடம் ஒப்புவிப்போம்.
மூவொரு கடவுளின் அன்பும் அருளும் அமைதியும் ஆசியும்
நம்மை வழிநடத்திக் காப்பனவாக.

டால்ட்டன் மனாசே,
டால்ட்டன் மனாசே,

அருட்பணியாளர்,
இறைவார்த்தைப் பணியாளர்,
ஆற்காடு லுத்தரன் திருச்சபை,